நானுஓயா பிரதேச சபைக்கு உட்பட்ட நானுஓயா நாவலர் தமிழ் மஹா வித்தியாலயத்திற்கு செல்லும் பிரதான வீதியை புனரமைப்பதற்குரிய நடவடிக்கை இன்று ஆரம்பமானது.
நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜின் வழிகாட்டலுக்கமைய இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது.
மிக நீண்ட காலமாக நாவலர் பாடசாலைக்குச் செல்லும் இவ்வீதி புனரமைப்பு செய்யாமல் பாடசாலை மாணவ மாணவிகள் பாடசாலைக்கு செல்வதற்கு பாரிய அசௌகரிய நிலைமைக்கு முகம் கொடுத்தனர்.
இருப்பினும் இம்முறை நுவரெலியா பிரதேச சபை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து அந்த நிதியின் மூலம் இன்று பாதையை சீர் செய்வதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதேச சபை உறுப்பினர் திலீப் குமார் தலைமையில் நடைபெற்றது.
அத்தோடு இப்பாடசாலைக்கு தொங்கதோட்டம், ரதல்ல கீ. பிரிவு, கிளாசோ, உட ரதல்ல போன்ற தோட்டங்களில் இருந்து பாடசாலை மாணவ மாணவிகள் பயணம் செய்து பாடசாலைக்குச் செல்லக்கூடிய நிலையில் இனி வரும் காலங்களில் இப் பாதையை சீர் செய்து இவர்களுக்கு இலகுவான முறையில் செல்லக்கூடிய விதத்தில் இப்பாதை புலமைப்பு செய்யப்படுகிறது.
இதன் மூலம் சுமார் நூற்றுக்கும் அதிகமான பாடசாலை மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள். இந்நடவடிக்கையினால் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பெரும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளனர்.


