வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘சிசு செரிய’ பஸ் சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று(15) வவுனியா பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

 

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வன்னி தேர்தல் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க கலந்து கொண்ட இந்த நிகழ்வில், வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் வரையான வழித்தடத்தில் மாணவர்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் விமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்தச் சேவை ஆரம்பிப்புத் தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் விமலேஸ்வரன் தெரிவிக்கையில்,

 

‘பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்தை உறுதிப்படுத்துவது எமது முக்கிய பொறுப்பாகும். அந்தவகையிலேயே இந்த ‘சிசு செரிய’ பஸ் சேவை வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, இந்த விசேட போக்குவரத்துச் சேவையானது மிக விரைவில் வடக்கு மாகாணத்தின் ஏனைய அனைத்து இடங்களிலும் உடனடியாக ஆரம்பிக்கப்படும். இதற்கான வேலைத்திட்டங்களை வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது,’ என உறுதியளித்தார்.

 

மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், பெற்றோரின் போக்குவரத்துச் சுமையைக் குறைக்கும் வகையிலும் இந்தத் திட்டம் வடக்கு மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *