எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்யும், எமக்கு மிக வேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது.
வடக்கு மாகாணம் உதவிகளை இந்தியாவை நம்பியிருக்கின்றது.
எங்களுக்கு இதுவரை உதவிகளை வழங்கிய இந்திய மக்களுக்கும், இந்திய அரசாங்கத்துக்கும் வடக்கு மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களிடமிருந்து மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று(28.05.2025) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்டச் செயலர் உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தூதுவர் சந்தோஷ் ஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டச் செயலராக நான் பணியாற்றியிருக்கின்றேன். இங்குள்ள கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக்கு மிக நன்றாகவே தெரியும்.
போரால் பாதிக்கப்பட்ட நீங்கள் மீள்குடியமர்வின் பின்னர் சட்டவிரோத மீன்பிடியால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள். உங்கள் பெறுமதியான வலைகளையும் இழந்திருந்தீர்கள்.
இன்று இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் உங்களுக்கு பெறுமதியான வலைகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குகின்றனர்.
இந்திய மக்களும், இந்திய அரசாங்கங்களும் எங்களுக்கு காலத்துக்குக் காலம் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தன.
முக்கியமாக இந்திய வீட்டுத் திட்டத்தை குறிப்பிடவேண்டும். அவர்களால் எமது ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டன.
இன்றைய தினம் முல்லைத்தீவு மருத்துவமனையின் புனரமைப்பை இந்தியா பொறுப்பேற்பதாக இலங்கைகான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அறிவித்திருக்கின்றார்.
அதற்கு அவருக்கு நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன். எதிர்காலத்திலும் எமது மக்களுக்கான உதவிகளை இந்தியா தொடரவேண்டும், என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் விசேட உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கான குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் வலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.