இலங்கை போக்குவரத்து சபையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு புதிய பேருந்து சேவைகள் இன்று(29) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மானிப்பாய் – ஆலங்குளாய் – அளவெட்டி ஊடாக தெல்லிப்பழை நோக்கி முன்னெடுக்கப்படும் வகையில் ஒரு பேருந்து சேவையும்; காங்கேசன்துறையில் இருந்து பலாலி வீதியூடாக மற்றொரு பேருந்து சேவையுமே இவ்வாறு மீள ஆரம்பிக்கப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் ஆலோசனைக்கமைய இலங்கை போக்குவரத்து சபை தலைவர்
ஜீவக பிரசன்ன புரசிங்கவின் பங்குபற்றுதலுடன் குறித்த பேருந்து சேவை ஆரம்பமானது.
நீண்ட காலங்களுக்குப் பின்னர் குறித்த வழித்தடங்கள் ஊடாக பேருந்து சேவை மீள ஆரம்பித்ததால் பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
குறித்த ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீ பவனாந்தராஜா மற்றும் போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

