மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தருக்கு 15 அடி உயரத்தில் கற்சிலை திறப்பு விழா- பாஸ்கரன்

முத்தமிழ் வித்தகரும் உலகில் முதலாவது தமிழ்  பேராசிரியருமான சுவாமி விபலானந்தருக்கு  15 அடி உயரமான கற்சிலை இம்மாதம் 17ஆம் திகதி பிற்பகல் 4.30  மணிக்கு மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட இருக்கிறதென  சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு விழாச் சபையின் தலைவர் க. பாஸ்கரன் தெரிவித்தார்.

இது தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு இன்று(14) காலை மட்டக்களப்பு ஈஸ்ட் லக்கூன் ஹோட்டலில் நடைபெற்றது.
அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் மகர யாழை ஆய்வு செய்து அதற்கு உருவம் கொடுத்து உலகிற்கு தந்தவர் அவரால் மகரயாழ் இன்றும் உயிர் வாழ்கிறது.

அது மட்டும் இன்றி உலகில் முதலாவது தமிழ் பேராசிரியராக பதவி பெற்று தமிழ் மொழிக்கும் அதன் இனத்திற்கும் நன்கு சேவையாற்றியவர் குறிப்பாக தமிழர்களின் மத்தியில் இருக்கின்ற குல பேதங்களை அறவே ஒழிக்க பாடுபட்டவர். இதற்கு மேலாக ஆன்மீகத்தில் துறவியாகி ஆன்மீக ஞானத்தை வழங்குவதில் அவர் காட்டிய உற்சாகம், வழிவகைகள் அளப்பெரியது.

இப்படியான ஒரு மகான் வாழ்நாளில் மறக்க முடியாதவர். அவரின் ஞாபகார்த்தமாக 15 அடி உயரமான கற்சிலையை கல்லடி பாலத்திற்கு அருகாமையில் திறந்து வைப்பதில் விபுலானந்தரின் நூற்றாண்டு விழா சபை மிகவும் சந்தோசம் அடைகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் சிலை நிர்மானக் குழு தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசா, சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபையின் பொதுச் செயலாளர் ச. ஜெயராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *