யாழ்ப்பாணத்தில் அதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பலாலி வீதியானது இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்கின்ற வீதியே இவ்வாறு முழுமையாக இன்று காலை 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் பயணிகள் பேருந்துகள், பொதுமக்கள் என பலரும் மிகவும் மகிழ்ச்சியாக இந்த வீதியால் பயணிப்பதை அவதானிக்க முடிந்தது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவில் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது கடந்த 31.01.2025 அன்று நடைபெற்றது.
அதி உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் இருந்த குறித்த வீதியை விடுவித்து மக்களின் பாவனைக்கு கையளிக்கும் ஆறு யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை முன்வைத்தார். இந்நிலையில் இன்றையதினம் குறித்த வீதி திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது அந்த வீதியில் பயணிப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு,
1.வீதி திறக்கப்படும் நேரம் மு.ப 06.00 தொடக்கம் பி.ப 05.00 வரை மாத்திரமே.
2.வீதியில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் வீதியின் இருபுறமும் புகைப்படம் எடுத்தல் ஒளிப்பதிவு செய்தல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.
3.இந்த வீதியில் நடைபயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.
4.வீதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் தவிர்ந்த ஏனைய பாரவூர்திகள் பயணிக்கத் தடை.
5.இந்த வீதியில் செல்லக்கூடிய வேகம் ஆகக்கூடியது 40 கி.மீ மாத்திரமே.
6.வீதியில் பயணிக்கும் சாரதிகள், அனைவரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆவணங்களை பயணத்தின் போது வைத்திருத்தல் அவசியமாகும்.
மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை மீறுதல் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடிய குற்றமாகும்.

