தாழங்குடாவில் மர்ம குழி; விசேட அதிரடிப்படையினர் சோதனை

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாழங்குடா பகுதியில் கடந்த 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஸாரான் குழுவினரால்; மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியில் மர்மமான முறையில் பாரிய குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளதையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் இன்று(06) சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதுபற்றி தெரியவருவதாவது,

 

குறித்த பகுதியான தாழங்குடா கடற்கரை பகுதியில்  கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் ஸாரான்குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சித்தனர்.

 

இந்த பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியை சுற்றி தகரத்தால் வேலி அமைக்கப்பட்டு அதனை அதன் உரிமையாளர் பராமரித்து வருகிறார்.

 

இந்த நிலையில் கடந்த 4ம் திகதி காணி அதன் உரிமையாளர் சென்ற போது அங்கு நிலத்தை பாரியளவில் குழி தோண்டப்பட்டு இருப்பதைக் கண்ட ஸாரான்குழு போன்றவர்கள் போல ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சத்தை அடுத்து நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

இதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் சில தீய சக்திகள் அந்த பகுதியில் ஏதாவது வெடிபொருட்கள் அல்லது வேறு ஏதாவது பொருட்களை புதைத்து வைத்துவிட்டு அதை தோண்டி மீட்டு எடுப்பதற்காக குழி தோண்டி இருக்கும் என்ற பல சந்தேகங்கள் அடிப்படையில் விசேட  அதிரடிப்படையினர் இன்று சென்று அந்த பகுதியில் நிலத்தை கம்பிகளால் குத்தியும் மற்றும் எக்ஸ்ரே இயந்திரம் மூலமாக சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

 

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *