தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 7 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று(23) மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், 55வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் இனோச் கேரத் அகியோர்களின் தலைமையில் கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவின் விநாசியோடை கெளதாரிமுனை கடற்கரையில் காலை 8.30 மணிக்கு இடம் பெற்றது.
”சுத்தமான கடற்கரை – கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளை அடைவதற்கு மாவட்ட மட்டத்தில் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக சுத்தமாகப் பேணுவதற்கும் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அதிகளவான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள், கண்ணாடியிலான கழிவுப் பொருட்கள், இலகுவில் அழிந்து போகக்கூடிய கழிவுப் பொருட்கள் என ஏராளமான கழிவுகள் உரிய முறையில் அகற்றப்பட்டுள்ளதோடு தொடர்ந்துவரும் காலங்களிலும் நிலைபேறான தூய்மையாக்கலை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்களுடன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்தொழில் சார்ந்த அமைப்புகள்,அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிஸ், முப்படையினர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் பணியினை முன்னெடுத்தனர்.

