மன்னார் இராணுவ சோதனைச் சாவடியில் துப்பாக்கி வெடிப்பில் வீரர் உயிரிழப்பு

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரொருவர், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.

 

இன்று (22) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், துப்பாக்கி வெடிப்பால் படுகாயமடைந்த குறித்த இராணுவ வீரர் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

மன்னார் சவுத் பார் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த 46 வயதான ஜெயத்திலக எனும் இராணுவ வீரரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 

சம்பவத்தின் போது மன்னார் பிரதான பாலத்துக்கு அருகே உள்ள சோதனைச் சாவடியில் அவர் கடமையில் இருந்ததாகவும், குறித்த சோதனை சாவடியில் கடமையில் ஈடுபடும் இராணுவ வீரர்களுக்கு அவரே துப்பாக்கிகளை வழங்கி வந்ததாகவும், அவ்வாறு வழங்க முற்படும்போது பெட்டிக்குள் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையே விபத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *