பக்தர்களின் கோரிக்கைக்கு இன்னும் பதிலில்லை; 250 கி.மீ. சுற்றிப் பயணிக்கும் நிலை

மன்னாரைச் சேர்ந்த கத்தோலிக்க பக்தர்கள் குழுவொன்று, புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பல தசாப்தங்களாக பயன்படுத்திவந்த வில்பத்து தேசியப் பூங்கா வழியாகச் செல்லும் பாரம்பரியப் பாதையை ஐந்து நாட்களுக்கு திறந்து விடுமாறு விடுத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

 

ஜூலை மாதம் 6ஆம் திகதி முள்ளிக்குளம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் நடைபெற்ற ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தில், முள்ளிக்குளம், பள்ளங்கண்டல் மற்றும் காயாக்குளி கிராமங்களைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் கலந்து கொண்டனர்.

 

வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளைக்கண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஜூலை மாதம் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறும் ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் வில்பத்து தேசிய பூங்கா ஊடான பாதையை மீண்டும் திறந்து விடுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

 

இந்த போராட்டத்தைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மன்னார் மாவட்டச் செயலாளர் கே. கனகேஸ்வரனிடமும் அவர்கள் கையளித்தனர்.

 

நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி, தாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த பாதை வழியாக இந்த ஆண்டு ஆலயத்திற்குச் செல்ல முடியாது என ஒரு வாரத்திற்கு முன்பாகவே வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவித்ததாகவும், இதனால் பல நூறு கிலோமீற்றர் சுற்றுப்பாதை வழியாகப் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

 

பாரம்பரிய பாதை ஊடான போக்குவரத்து மறுக்கப்பட்டுள்ளதால் சுமார் 30 கிலோமீற்றர் பயணத்தை சுமார் 250 கிலோமீற்றர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முள்ளிக்குளம் பங்கின் பொறுப்பாளர் அருட்தந்தை டெரன்ஸ் குலாஸ் தெரிவித்தார்.

 

எனினும் இன்று வரை(11) கிறிஸ்தவ பக்தர்களின் கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

எவ்வாறெனினும் ஒரு சில பக்தர்கள் அனுராதபுரம்-புத்தளம் ஊடாக சுமார் 250 கிலோமீற்றர் தூரம் பயணித்த ஆலயத்தை அடைந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

முள்ளிக்குளம் வழியாக பள்ளங்கண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்திற்குச் செல்லும் பாதையைப் பயன்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தெளிவான தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

தற்போது அந்தப் பாதை இயற்கையாகவே மீண்டும் வனப்பகுதியுடன் இணைந்து வருவதுடன், அது அதிக சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கடந்த மாத இறுதியில் நடைபெற்ற உத்தியோகப்பூர்வக் கூட்டத்தில், இந்த ஆண்டு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழாவை வழக்கமான பாரம்பரிய முறையிலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டதாக அந்தப் பகுதி கத்தோலிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

 

17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பள்ளங்கண்டல் தேவாலயத்திற்குப் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் யாத்திரிகர்கள், 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் மாத்திரமே பாரம்பரியப் பாதையைப் பயன்படுத்த முடியாமல் இருந்ததாக கத்தோலிக்க பக்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

வருடாந்தம் சுமார் 30,000 யாத்திரிகர்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்க வருவதாகவும் அவர்கள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களை மீறி தேசியப் பூங்கா எல்லைக்குள் சுதந்திரமாகச் செல்வதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *