தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 19ஆம் திகதி அன்று பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் நான்கு டிப்பர் வாகனங்களும் ஒரு உழவு இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசாரணைகளில், திருகோணமலை மாவட்டத்திற்காக வழங்கப்பட்ட மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி கல்லாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக டிப்பர் சாரதிகள் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரத்தை நாளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, கல்லாறு பகுதியில் அகழப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படும் மணல் கட்டுமானப் பணிகளுக்கு ஏற்ற தரமுடையதல்ல என்றும், அதில் உப்பு மணல் கலந்திருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தர்மபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்தார்.
எனவே, கட்டுமானப் பணிகளுக்காக மணலை கொள்வனவு செய்வோர் அதன் தரத்தை உறுதிப்படுத்தி, பொருத்தமான மணலை மட்டுமே பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

