மட்டு மாவட்டத்தில் 5 மாதத்தில் வீதி விபத்தில் 32 பேர் பலி – பிரதி பொலிஸ் மா அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 மாதங்களில் வீதி விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலையானதாக இருந்த போதும் போக்குவரத்து துப்பரவு செய்யப்பட வேண்டும்.

 

எனவே மாவட்டத்தில் வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றவேண்டும்.

 

அதேபோல் மோட்டார் சைக்கிளில் தலைகவசம் இல்லாது பிரயாணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர கட்டளை பிறப்பித்துள்ளார்.

 

மட்டக்களப்பு மாவட்ட வீதி பாதுகாப்புக் குழுக் கூட்டம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய மாநாட்டு மண்டபத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித் லீலாரத்தின தலைமையில் இன்று(28) இடம்பெற்றது.

 

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய  கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர இவ்வாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

 

மாவட்டத்தில் கடந்த 2024 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதிவரை 611 வீதி விபத்தில் 72 பேர் உயிரிழந்ததுடன் 1975 பேர மது போதையில் வாகனம் செலுத்தியுள்ளனர்.

 

இந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே 25 ம் திகதி வரை 215 வீதி விபத்துக்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த விபத்துக்களுக்கு முதலாவது காரணம் வேகமாக வாகனங்களை செலுத்தியமை மற்றும் மது போதையில் வாகனங்களை செலுத்தியமையே காரணங்கள்.

 

எனவே மாவட்டத்தில் கரையோரப் பிரதேசமான களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர், சந்திவெளி, வாழைச்சேனை மற்றும் ஓடடுமாவடி போன்ற பிரதேசங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

 

அதன் பிரகாரம் குறித்த பிரதேசங்களில் பெற்றோர்கள் தலைக்கவசம் அணிந்து கொண்டு பிள்ளைகளுக்கு தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் 3 பேரை ஏற்றிக் கொண்டு பிரயாணிக்கின்றனர்.

 

அதேபோல பலர் தலைக்கவசம் இன்றி 3 பேருக்கு மேல் பிரயாணிப்பது போக்குவரத்து சட்டத்துக்கு ஏதிரானது.

 

ஆகவே இவ்வாறு பிரயாணிப்பவர்களுக்கு தலைக்கவசம் அணியுமாறு 7 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறும் அதன் பின்னர் அவர்களுக்கு எதிராக போக்குவரத்து பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவும்.

 

போக்குவரத்து சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான் காத்தான்குடிக்கு ஒரு சட்டம் இல்லை.

 

எனவே போக்குவரத்து சட்டத்தை மீறி வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

 

அதேவேளை இந்த குறித்த பிரதேசங்களில் வீதி நடை பாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.

 

அதற்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதனை மீறி நடைபாதையை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

 

இந்த வீதி பாதுகாப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள போதும் பொதுமக்களின் வீதி பாதுகாப்புக்கு பொறுப்புக் கூறவேண்டிய சிலர் வருகை தரவில்லை.

 

எனவே அடுத்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் வராத திணைக்கள மற்றும் தனியார் பஸ்வண்டி சங்கம், முச்சக்கரவண்டி சங்கங்கள், உட்படவர்கள் வராதவிடத்தில் அவர்களுக்கு எதிராக அந்த திணைக்கள செயலாளர்களுக்கு முறைப்பாடு செய்யப்படும் என்றார்.

 

அதேவேளை மாவட்டத்தில் பழுதடைந்த வீதிகள் மதகுகள், மற்றும் உடைந்துள்ள வடிகான் மூடிகள், நடபாதையை ஆக்கிரமித்துள்ளமை, தலைக்கவசம் அணியாது பிரயாணிப்பவர்கள் போன்றவை தொடர்பான குறைபாடுகளை வீடியோ படங்கள் மூலமாக காட்சிப்படுத்தி அந்தந்த துறை சார்ந்தவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *