கனடாவில் டொராண்டோவில் உள்ள மால்டன் குருத்வாரா என்ற பகுதியில் இந்துக்களுக்கும் இந்திய அரசுக்கும் எதிராக காலிஸ்தான் குழுவினர் நேற்று(04) பேரணி நடத்தியுள்ளனர்.
இப் பேரணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய தலைவர்களின் உருவ பொம்மையை கூண்டில் வைத்து காலிஸ்தான் குழுவினர் பேரணியாகச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக கனடா இந்து வர்த்தக சபை அமைப்பினர் கண்டனத்தை பதிவிட்டுள்ளனர். ”கனடாவில் எட்டு இலட்சம் இந்துக்களும் 18.6 இலட்சம் இந்திய வம்சாவளியினரும் வசித்து வருகின்றனர். தற்போது இந்துக்களை குறிவைத்து பேரணி நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆபத்தான போராட்டத்துக்கு அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்று இந்து வர்த்தக சபை கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இப் பேரணியை ’கே-கேங்’ என்ற காலிஸ்தான் அமைப்பினர் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேரணிக்கு கண்டனம் தெரிவித்துள்ள கனடா பத்திரிகையாளர் டேனியல் போர்ட்மேன் கூறியதாவது: ”எங்கள் தெருக்களில் வன்முறையில் ஈடுபடும் ஜிஹாதிகள், காணும் யூதர்களை எல்லாம் அச்சுறுத்தும் வகையில், சமூகக் கட்டமைப்புக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனால், காலிஸ்தான் குழுக்கள் இயங்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி அளிக்கப்படுகிறது. காலிஸ்தானியர்களை கையாள்வதில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிலிருந்து மார்க் கார்னி மாறுபட்டவராக இருப்பாரா?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.