ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியாவில் அமைக்கப்பட்டு வரும் “திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தின்” தற்போதைய முன்னேற்ற நிலைமைகளை ஆராயும் நோக்கில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் நேற்று(29) கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் நேரில் பார்வையிடப்பட்டதுடன், திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதற்குத் தேவையான எஞ்சிய பணிகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், பராமரிப்பு நிலையத்தின் எதிர்வரும் திறப்பு விழாவின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மாவட்ட அரசாங்க அதிபருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட பொறியியலாளர், கிண்ணியா பிரதேச செயலாளர், சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர், கிண்ணியா பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை தலைவர் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

