மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவு செய்யப்பட்ட 16 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை இன்று(11) வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் இன மத பேதமின்றி தேசிய ரீதியில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதுடன் இப் பிரதேச வீரர்களின் திறமைகள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி. நவரூபரஞ்ஜினி முகுத்தன், இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கே. பற்றிபோல, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவநீதன், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






