கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இரண்டாவது காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயல மாநாட்டு மண்டபத்தில் இன்று(11) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான எஸ். முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டு, மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலாளர் பிரிவுகள் ரீதியாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், கடந்த மாவட்ட மட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தின் கூட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
மேலும் பிரதேச செயலர் பிரிவுகள் ரீதியாக காணி கச்சேரிக்குறிய காணிகள் , வர்த்தக நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்ட காணிகள், பொதுத் தேவைகளுக்காக முன்வைக்கப்பட்ட காணிகள் வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் எல்லையிடப்பட்ட பகுதிகளில் விடுவிக்கபட வேண்டிய காணிகள் தொடர்பான விடயங்கள் திணைக்கள அதிகாரிகளுடன் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), காணிப்பயன்பாட்டு திட்டமிடல் பிரிவின் உதவிப் பணிப்பாளர், கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாவட்ட செயலக, பிரதேச செயலகங்களின் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



