தமிழரசுக்கட்சி சார்பாக கரைச்சி பிரதேச சபையின் முரசுமோட்டை வட்டார வேட்பாளர்களான பரமலிங்கம் பாஸ்கரன் மற்றும் மகேந்திரன் கிருபாகரன் ஆகியோரை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் இரண்டாம் கட்டை ஊற்றுவிநாயகர் ஆலய முன்றலில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உரையாற்றுகையில், இன்றைய மே தின கூட்டத்தில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சிறப்பு அதிதி கலந்து கொண்டமையை அவதானிக்க முடிகின்றது.
உலக ஒழுங்கு எப்படி போகிறது என்றால் அமெரிக்காவுக்கு ஒரு முகத்தைக்காட்டி காசு வாங்குகின்றனர். இந்திய பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பை வழங்குகின்றனர். சீனாவை மடியில் தூக்கி வைக்கின்றனர். இந்த நாட்டில் இந்த தேர்தல் நடந்த பின்னர் இனியொரு தேர்தல் நடைபெறாது. நடாத்த இந்த அரசாங்கம் தயார் இல்லை.
இந்த பிரதேச சபையை கைப்பற்றி தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆட்சியை தக்க வைக்க நினைக்கின்றனர். சர்வதேச நாணய நிதி காசு அமெரிக்கா, இந்தியா நல்லுறவு தமக்கு இருப்பதாக இவர்கள் நினைக்கின்றனர்.
இன்றைய நிகழ்வானது சீன பிரதிநிதிகளின் பிரசன்னம் அனுர குமாரதிசாநாயக்கவே உங்களுக்கு வாய்ப்பில்லை என்பதை உணர்த்துகின்றது. இன்னும் ஒரு மூன்று மாதங்களில் தேர்தல் முடிய வரிசை யுகத்தை நோக்கி நாடு செல்லவுள்ளது. இன்று எரிபொருள் விலை குறையலாம் இன்னும் ஓரிரு வாரங்களில் அவர்களின் அடுத்த நகர்வுகளை மக்கள் பார்க்கப்போகின்றனர்.
சீனியின் விலை உப்பின் விலை அதிகம் இவற்றை வரலாற்றில் பார்த்தது கிடையாது. மக்கள் புரட்சி, ஒடுக்குமுறைக்கு எதிரான அரசு மக்கள் வாழ்க்கை என்று எல்லாம் சொல்லிய அரசு, அரகல போராட்டத்தை நடாத்தியவர்கள் இன்று மக்களுடைய வயிற்றை அடிக்கிறார்கள்.
தேர்தல் முடிய வாக்குறுதி நிறைவேற்றாமல் இவர்கள் வீட்டை நோக்கி செல்ல வேண்டி வரும். நாங்கள் யார் ஏன் இந்த சிற்றரசுகள் எமது கைகளில் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் நியாயமானவர்கள் கெளரவமானவர்கள் அறத்தின் வழி அரசியல் செய்தவர்கள்.
ரோகண விஜயவீர என்ற ஜேவிபியின் ஸ்தாபகரை முதன் முதலில் சிறையில் கொண்டு வந்து நிர்வாணம் ஆக்கிய போது அவரின் மானத்தை காக்க தான் கட்டியிருந்த துவாயை கொடுத்தவர் இப்பகுதி தமிழர்.
சின்ன பிரதேச சபையைக்கூட தமிழர்கள் ஆளக்கூடாது என்று எண்ணுகிறார்கள். அரசியல் பிரச்சனை இருக்கின்றது என்று என்பிபி இதுவரை கூறவில்லை. ரோகணவிஜேய வீர சுன்னாகத்தில் வைத்து பேசியிருக்கிறார். தமிழர்களுக்கு பிரச்சனை உண்டு என்பதை வாசு தேவ நாணயக்காரவும் கிளிநொச்சியில் வைத்து தமிழ் மக்களுக்கு பிரச்சனை உள்ளது என்பதை பேசியிருக்கின்றார்.
இது போராட்டம் ஜனநாயக ஆயுதமான வாக்குச்சீட்டை பயன்படுத்தாது விட்டால் சில புல்லுருவிகள் எம்மை அழிப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.