மல்வத்தை கிராம தமிழ் மக்கள் 35 வருடங்களாக காணியை இழந்து பரிதவிப்பு

35 வருடங்களாக தமது வயல்க்காணிகளை இழந்த நிலையில் அம்பாறை மல்வத்தை உள்ளிட்ட சில கிராமங்களைச் சேர்ந்த 70 இற்கு மேற்பட்ட தமிழ் விவசாயக் குடும்பங்கள் தமக்கான நீதி மறுக்கப்பட்ட நிலையில் கண்ணீருடன் தாம் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மல்வத்தை விவசாய கமநல சேவை பிரிவிற்குட்பட்ட தொட்டாச்சினிங்கி விவசாயக் கண்டக் காணியே கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் சகோதர பெரும்பான்மை இனத்தவர்களால் இவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டு தம்மை விவசாயம் செய்ய விடாமல் எந்த வித காணி ஆவணங்களும் இன்றி அவர்களே விவசாயம் செய்து வருவதாகவும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும்,
தொட்டாச்சினிங்கி விவசாயக் கண்ட காணி இளந்தோர் சங்க உறுப்பினர் அழகையா சந்திரசேன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

குறித்த கண்டத்தில் 402 ஏக்கர் வயல் நிலங்கள் இருந்ததாகவும் அதில் 180 ஏக்கர் வரை தற்போது செய்கை பண்ணப்பட்டு வரும் நிலையில்,
164 ஏக்கர் விவசாய நிலத்திற்கு சொந்தக்காரர்களான
70 இற்கு மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை பெரும்பான்மை சகோதர இனத்தவர்கள் செய்கை பண்ண விடாமல் தாமே விவசாயத்தை மேற்கொண்டு வருவதுடன், அரச அதிகாரிகளும் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வண்ணம் செயற்படுவது தமக்கு இழைக்கப்படும் அநீதியாகவே தாம் பார்ப்பதாக தெரிவித்தார்.

தொட்டாச்சினிங்கி கண்டம் ஆரம்ப காலத்தில் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்டதாக இருந்த நிலையில் தற்போது உகனை பிரதேச செயலகத்திற்குரிய காணியென அதிகாரிகள் கூறுவது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும், இதற்கு மாவட்ட செயலகமும் உடந்தையாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த வயல்க் காணிகளுக்கு சொந்தக்காரர்களான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது மல்வத்தை
வீரமுனை, கல்முனை ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

உகனை சம்மாந்துறை எல்லைப் பகுதியில் இருக்கும் இந்த வயல்க் காணிகளுக்கு கடந்த 35 வருடங்களுக்கு முன்னர் அரசினால் வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரம் இந்தக் காணிக்கு சொந்தக்காரர்களான மக்களிடம் இருக்கின்ற போதிலும் இவர்களது காணிகளை அடாத்தாக பிடித்தவர்கள் அந்த காணிகளை திருப்பிக் கொடுக்காமை இந்த மக்களுக்கு 35 வருடமாக இழைக்கப்பட்ட நீதியாகவே இருக்கின்ற நிலையில் இந்த புதிய அரசு தீர்வைப் பெற்றுத்தரும் என இந்த மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *