போயா தினத்தில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு முச்சக்கரவண்டியில் சூட்சகமாக மறைத்து வைத்து கசிப்பு கடத்திய ஒருவரை ஏறாவூர் சவுக்கடி பகுதியில் வைத்து நேற்று(05) மாலை கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளதுடன் 20 லீற்றர் கசிப்பை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸார் சம்பவ தினமான நேற்று ஏறாவூர் சவுக்கடி வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு கசிப்பு கடத்திச் சென்ற முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது முச்சக்கர வண்டிக்குள் பொருத்தப்பட்ட ஒலிவாங்கி பெட்டி (பொக்ஸ்) உள்ளே சூட்சகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 போத்தல் கசிப்பை மீட்டதுடன் முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

