பாகிஸ்தானில் அரசியல் ஆளுமைகளாக உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆகியோரின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்களது எக்ஸ் தள கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ம் திகதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலை தொடர்ந்து பிரபல பாகிஸ்தான் நடிகர்கள் மகிரா கான், ஹனியா ஆமிர், சனம் சயீத் மற்றும் அலி ஜாபர் ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே பாகிஸ்தான் நாட்டின் 16 யூடியூப் சேனல்களை இந்தியா முடக்கி இருந்தது. இந்தியாவிற்கு எதிராக தவறான தகவல்களை இந்த யூடியூப் சேனல்கள் பகிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் எக்ஸ் தள கணக்கு முடக்கத்தை எதிர்கொண்டுள்ள பிலாவல் பூட்டோ, சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தினால் அதில் இந்தியர்களின் ரத்தம் பாயும் என எச்சரித்திருந்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.