இலங்கையின் சுகாதார சேவையில் தற்போது 43,553 செவிலியர்கள் பணியில்

இலங்கையின் சுகாதார சேவையில் தற்போது 43,553 செவிலியர்கள் பணியாற்றி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 

இது ஒட்டுமொத்த சுகாதாரப் பணியாளர்களில் 30 சதவீதமாகும் என்ற போதிலும், சுகாதார சேவைக்குத் தேவையான செவிலியர்களின் எண்ணிக்கை இதுவரை முழுமையடையவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு அமைய, சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு நாட்டுக்கு இன்னும் பெருமளவிலான செவிலியர்கள் தேவைப்படுவதாகவும், செவிலியர் சேவைக்கான ஆட்சேர்ப்பின் போது முறையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

 

மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும் நோக்கில் அலரி மாளிகையில் இன்று (14) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

 

இன்று மாணவ செவிலியர் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட இந்தப் பிரிவினர் சேவையில் இணையும் போது, நாட்டின் சுகாதார சேவையில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *