வாராந்த விசேட கட்டுரை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் மோட்டார் சைக்கிளில் கலந்து கொண்ட சிலர் தலைக்கவசம் அணியவில்லை என்பதைக் காரணமாகக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இலங்கை பொலிஸாரின் முகப்புத்தக பக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது கோரி கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனை சில இனவாத பக்கங்கள் திட்டமிட்ட முறையில் பெரிதாக்கி, ஒரு மிகப்பெரிய சட்டவிரோதச் செயலாக சித்தரிக்க முயல்கின்றன.
உண்மையில், தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது போக்குவரத்து சட்ட மீறலாக இருந்தாலும், அதற்கான தண்டனை சாதாரண அபராதமே ஆகும். ஆனால் இங்கு அந்தச் சட்டம் ஒரு காரணமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதன் பின்னணியில் செயல்படுவது தமிழ் மக்களின் நினைவேந்தல் உணர்வுகளை குறிவைக்கும் இனவாத அரசியல் மனநிலையே என்பதில் ஐயமில்லை.
முள்ளிவாய்க்கால் என்பது ஆயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்ட தமிழர் இனத்தின் வேதனையான வரலாறு. அந்த நினைவுகளை மதிப்பதற்காக மக்கள் கூடும் தருணங்களை தொடர்ந்து சந்தேகத்துடனும், கண்காணிப்புடனும் அணுகுவது நல்லிணக்கத்திற்கு வழிவகுக்காது. மாறாக அது சமூக இடைவெளியையும் இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கையையும் மேலும் தீவிரப்படுத்தும்.
இதேவேளை, 15 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு பிக்கு, வைத்தியசாலையில் இருந்து பிணையில் வெளியேறிய சம்பவம் சமூகத்தில் பெரும் கேள்விகளை எழுப்புகிறது. அந்தக் கைது நடவடிக்கையே தாமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், இன்று தலைக்கவச விவகாரத்தில் தீவிரம் காட்டும் அதே இனவாதக் குழுக்கள் அப்போது எந்தக் குரலும் எழுப்பவில்லை. இது அவர்களின் நீதிக்கான அக்கறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றே அன்றி, உண்மையான சட்டநீதிக்கான போராட்டமல்ல என்பதை வெளிப்படுத்துகிறது.
ஒரு சமூகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும். இன, மத அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபங்களும் அரசியல் அழுத்தங்களும் நீதியின் நம்பகத்தன்மையை சிதைக்கும். இன்று தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை குறிவைக்கும் இந்தப் பேரினவாத அரசியல், நாளைய தினம் அதன் சொந்த சமூகத்தையே பாதிக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளது.
எனவே, பொறுப்புள்ள அரசியல் மற்றும் சமூக அணுகுமுறையே நாட்டிற்கு தேவையானது. நினைவேந்தல்களை குற்றமாகப் பார்க்காமல், மனித உணர்வுகளாக மதிக்க கற்றுக்கொள்ள வேண்டிய காலம் இது.

