சிறுவர்களுக்கு பணம் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியருக்கு விளக்கமறியல்

கல்முனையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட பத்தாயிரம் ரூபா சிறுவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்து அதன் பால் ஈடுபடுத்தி வந்த வர்த்தகர் ஒருவரை எதிர்வரும் ஜீன் 18ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

 

இது பற்றி தெரியவருவதாவது,

 

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஓரினச்சேர்க்கை செயற்பாடு இடம்பெற்று வந்துள்ளது. இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

 

இதன்போது அங்கு சென்ற இரு சிறுவர்களையும் வரவேற்ற குறித்த வர்த்தகர் ஓரினச்சேர்க்கை செயற்பாட்டிற்காக ரூபா பத்தாயிரம் தருவதாக பேரம் பேசியுள்ளார்.

 

பின்னர் சிறுவர்களில் ஒருவரை அச்செயற்பாட்டியில் ஈடுபடுத்தியுள்ளார். இதன்போது மற்றுமொரு சிறுவன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட காணொளியினை வர்த்தகரின் கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

 

பின்னர், ஏற்கனவே பேரம் பேசிய ரூபா பத்தாயிரம் சிறுவர்களுக்கு கிடைக்கப் பெறாமையினால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட காணொளியினை பதிந்த வர்த்தகரின் கைத்தொலைபேசியினை இரு சிறுவர்களும் எடுத்துச் சென்றுள்ளனர்.

 

அதனை தொடர்ந்து அச்சிறுவர்கள் குறித்த செயற்பாட்டிற்கு பேரம் பேசிய பணத்தை தருமாறு கோரி வர்த்தகரை மிரட்டி அச்சுறுத்தியதுடன், தரவேண்டிய தொகை கிடைக்கப்பெறாத பட்சத்தில் சமூக ஊடகங்களில் குறித்த காணொளியை பிரசுரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

இதனை அடுத்து 56 வயது திருமணமான வர்த்தகர் கடந்த 06ஆம் திகதி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது வர்த்தக நிலையத்திற்கு வருகை தந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் மேசையில் இருந்த விலையுயர்ந்த கைத்தொலைபேசியினை திருடிச் சென்றிருப்பதாக முறைப்பாடு செய்திருந்தார்.

 

இந்த முறைப்பாட்டினை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம் முஸ்தபா விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த 17 வயதுடைய இரு சிறுவர்களையும் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் வர்த்தகர் ஓரினச் செயர்க்கையில் ஈடுபட சிறுவர்களுக்கு பணம் தருவதாக கூறி ஈடுபட்டுவந்துள்ளார் என திடுக்கிடும் விடயங்கள் வெளியாகியது.

 

இது தொடர்பாக கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார் வழிகாட்டுதலின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம் முஸ்தபா மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 

இதனையடுத்து கடந்த 21ஆம் திகதி குறித்த பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து வழக்கு கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த காணொளியை இரு சிறுவர்கள் சார்பாக ஆஜரான எதிர்தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு சமர்ப்பித்த நிலையில் வழக்கின் சான்றுப்பொருளாக எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட பதில் நீதிவான் கைதான இரு சிறுவர்களில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறும் பிரதான சந்தேகநபரான வர்த்தகரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்து வழக்கினை ஒத்தி வைத்திருந்தார்.

 

பிரதான சந்தேகநபரான வர்த்தகர் தலைமறைவாகி இருந்து வந்துள்ள நிலையில் குறித்த வழக்கும் நேற்று (25) இடம்பெற இருந்த நிலையில் தலைமறைவாகி இருந்த வர்த்தகர் 05 சட்டத்தரணிகளுடன் நீதிமன்ற வளாகத்துக்குள் செல்ல இருந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்தனர்.

 

அதன் பின்னர் கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் குறித்த வழக்கு எடுக்கப்பட்டபோது கைது செய்யப்பட்ட வர்த்தகரை மன்றில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் ஜுன் மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *