புனித வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மங்களாராமய விகாரையில் விசேட மத வழிபாடுகளும், கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.
விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரங்களையும் பார்வையிட்டதுடன் தன்சல் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அதேவேளை மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் அமைக்கப்பட்ட வண்ணமயமான மின்விளக்கு அலங்காரங்களுடன் பிரம்மாண்டமான வெசாக் அலங்காரக் கூட்டை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.எம்.யூ.பிரதீப் களுப்பான, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன மற்றும் சர்வமத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இணைந்து மக்கள் பார்வைக்காக திறந்து வைத்தனர்.
இம்முறை வெசாக் வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளில் தாகசாந்தி (பானங்கள் வழங்குதல்) உள்ளிட்ட பல சமூக நல நிகழ்வுகள் சர்வ மத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

