மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது.
இதற்குப் பதிலளித்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இலங்கை அணி சார்பில் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க, 103 பந்துகளுக்கு முகம் கொடுத்து 79 ஓட்டங்களைப் பெற்றதுடன், தனது 19ஆவது ஒருநாள் அரைச்சதத்தையும் பூர்த்தி செய்தார்.
அவரது இந்த இன்னிங்ஸில் 9 நான்கு ஓட்டங்களும் ஒரு ஆறு ஓட்டமும் அடங்கும்.
அதேபோல், அணியின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட புதிய தலைவர் குசல் மெந்திஸ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி, 62 பந்துகளில் தனது 35ஆவது ஒருநாள் அரைச்சதத்தைப் பதிவு செய்து 72 ஓட்டங்களைப் பெற்றார்.
இவர்களைத் தவிர, நடுத்தர வரிசையை வலுப்படுத்திய சரித் அசலங்க (45 ஓட்டங்கள்) மற்றும் ஜனித் லியனகே (ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள்) ஆகியோரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி, இலங்கை அணியின் ஓட்டப் பலகையை 300 ஓட்டங்கள் எல்லைக்கு மேல் கொண்டு செல்ல சிறந்த பங்களிப்பை வழங்கினர்.
பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் மெதிவ் போர்ட் 9 ஓவர்களில் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ரொஸ்டன் சேஸ் 10 ஓவர்களில் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டி நடைபெற்ற ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில், இலங்கை அணி ஒருநாள் போட்டி ஒன்றில் விளையாடுவது 13 வருடங்களுக்குப் பின்னராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

