மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்திருக்கும் மண்டாடி திரைப்படம் கடந்த வாரத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டிருக்கிறது. 80 கோடி ரூபாய்க்கும் மேல் அப்படம் வசூலித்திருக்கிறது. இந்நிலையில் அந்தப் படம் வெற்றி பெற்றதற்கான காரணத்தை பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசுகையில், ” மண்டாடி திரைப்படத்தின் வெற்றி தொடர்பாக ஒரு வீடியோ போட வேண்டும் என்று நினைத்தேன். இப்போதுதான் அதற்கான நேரம் வாய்த்தது. இப்படத்தின் பட்ஜெட் 75 கோடி ரூபாய். அந்த தொகை நிறைய பேரின் கனவு. இந்த சினிமா மத்த துறை மாதிரி இல்லை. சினிமா என்பது ஒரு மேஜிக்.க்ளிக் ஆனால் சூப்பர். இல்லையென்றால் ஒன்றுமே இல்லை. அந்த 75 கோடி ரூபாயில் படம் க்ளிக் ஆகவில்லை என்றால் 5 கோடி ரூபாய்கூட வராது. இதெல்லாம் சினிமாவில் நடக்கும்.
தயாரிப்பாளர் நம்பினார்: படத்தில் நிறைய செலவுகள் இருந்தன. கன்டென்ட்டை மதிப்பார்கள் என தயாரிப்பாளர் நம்பினார். அதுதான் முதல் வெற்றி. இந்தப் படத்துக்கு முழுக்க முழுக்க வங்கிகள்தான் பணத்தை கொடுத்திருக்கின்றன. இந்தப் படமே தில்லுக்கு துட்டுதான். முதல் ஷெட்யூலில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நன்றாக செலவு செய்வார்கள். ஆனால் இரண்டாவது ஷெட்யூலில் செய்யமாட்டார்கள். இதில் அப்படி இல்லை. அதனால்தான் நமக்கு பிரமாண்டமாக தெரிந்தது.
லட்சம் தடைகள்: மதிமாறன் இதற்கு முன்னதாகவும் ஒரு படம் எடுத்திருக்கிறார். அது சரியாக போகவில்லை. ஒரு சறுக்கல் வந்தவுடன் வாய்ப்பின் அருமை குறித்து அவருக்கு தெரிந்தது. மதிமாறன் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். அந்த வலிகளை எல்லாம் கடந்து மனிதனாக பக்குவப்பட்ட பிறகுதான் இந்தப் பட வாய்ப்பு அவருக்கு வருகிறது. 75 கோடி ரூபாயை சூப்பராக பயன்படுத்தியிருக்கிறார். இதற்கு முன்னர் இப்படி யாருமே படம் எடுத்தது இல்லை. அதன் காரணமாக லட்சம் தடைகள் வர வாய்ப்புகள் இருந்தன.
கொண்டாடினார்கள்: படத்தின் 90 சதவீதத்தை சென்னைக்கு வெளியேதான் எடுத்திருக்கிறார்கள். மீனவர்கள் சும்மாலாம் ஓகே சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு உணர வைத்தால்தான் முழுதாக ஆதரவு கொடுப்பார்கள். அதை மதிமாறன் அழகாக புரிய வைத்திருக்கிறார். அந்தப் படத்தின் வேர் மதியின் ஆன்மாவிலிருந்து வந்திருக்கிறது. அதனால்தான் மக்கள் இந்தப் படத்தை தங்கள் படமாக கொண்டாடினார்கள். சூரி வெல்ல வேண்டும்: சூரி பெரிதாக ஜெயிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் எல்லோரும் வேண்டுகிறார்கள். அவரிடம் போலி நடிப்பே இருக்காது. ரொம்ப அடி வாங்கி வந்திருக்கிறார். இந்த இடம் சும்மா ஒன்றும் கிடைக்கவில்லை. கால் நூற்றாண்டு அவர் உழைத்திருக்கிறார். சூரியை இந்த சினிமா ரொம்ப பக்குவப்பட்ட மனிதராக மாற்றியிருக்கிறது. சூரியை தமிழ்நாட்டில் இருக்கும் பல பேஜ்கள் கொண்டாடுகின்றன. அதுதான் அவரது வெற்றி. சூரிக்காக ஒரு தடவை போய் பார்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அவர் இனிமேல் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒருவர் உழைத்துக்கொண்டே இருந்தால் தமிழ்நாடு மேடை போட்டுக்கொடுத்துவிடும். அதேமாதிரிதான் சூரிக்கும். ஜிவி பிரகாஷின் இசை எல்லாம் ஆத்மார்த்தமாக இருக்கின்றது. கதிர் கேமரா எல்லாம் சூப்பர். இதனால்தான் படம் வெற்றி பெற்றது” என்றிருக்கிறார்.

