மட்டக்களப்பில் 2 வயதும் 10 மாதம் கொண்ட குழந்தை சோழன் உலக சாதனை

மட்டக்களப்பு கொம்மாந்துறையைச் சேர்ந்த 2 வயதும் 10 மாதம் கொண்ட கிஷன்ராஜ் தன்யஸ்ரீ 195 நாடுகளின் தலை நகரங்களின் பெயர்களை 5 நிமிடம் 24 செக்கனில் தெரிவித்து சோழன் உலகசாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

 

2 வயதும் 10 மாதம் கொண்ட  கிஷன்ராஜ் தன்யஸ்ரீ சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கும் சாதனை நிகழ்வு நேற்று முன்தினம்(17) மக்கள் உதவிகள் மக்கள் பவுண்டேசன், அனுசரனையுடன் மட்டக்களப்பு கிறீன் காடின் ஹோட்டலில்; சோழன் உலக சாதனை புத்தகத்தின் இலங்கை கிளையின் செயலாளர் கதிரவன் இன்பராசா தலைமையில் இடம்பெற்றது.

 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டு மாநகரசபை ஆணையாளர் தனஞ்சயன் மற்றும் அதிதிகளாக செங்கலடி மத்திய மகாவித்தியாலய அதிபர் சிவயேஸ்வரன், கல்குடா ஆசிரியர் ஆலோசகர் சுகந்தி நிறஞ்சன் மற்றும் சோழன் உலக சாதனை புத்தக அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதன் போது குறித்த குழந்தை மிகக் குறைந்த நிமிடங்களில் 195 நாடுகளின் தலைநகரின் பெயர்களை ஒப்புவித்து சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

 

இவ்வாறு சாதனை பிடித்த குழந்தைக்கு பதக்கங்கள் அணிந்து வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை அதிதிகள் வழங்கி கௌரவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *