யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களும் அவர்களின் படகுகள் இயந்திரங்கள் என்பன இன்று அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளன.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று (10) அதிகாலை கடற்படையினர் கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்த படகுகள், இயந்திரங்கள், சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டோர் கடல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்கள் அதிகரித்து வருவதாகவும் இவர்களை கட்டுப்படுத்த சட்டம் கடுமையாக மாற்றப்படவேண்டும் எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

