டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 5,018 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “டெங்கு நோயால் 6 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 5,018 பேர் பதிவாகியுள்ளனர்.”

கடந்த சில வாரங்களாக, தினசரி அடிப்படையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதைக் அவதானிக்கின்றோம்.

தற்போதைய வானிலை நிலவரத்தாலும், தென்மேற்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாலும், எதிர்காலத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இதேபோல், டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளால் பரவும் மற்றொரு வைரஸான சிக்குன்குனியா நோய் மேல் மாகாணத்தை மையமாக கொண்டு பிற மாவட்டங்களிலும் அதிகளவில் பதிவாகியுள்ளது.

“எதிர்காலத்தில் நுளம்புகள் மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், சுகாதார பணிப்பாளரால் மே மாதத்தை விசேட நுளம்பு கட்டுப்பாட்டு மாதமாக அறிவித்துள்ளார்”

“வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டுமான தளங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் அனைவரும் தங்கள் கவனத்தை செலுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.”

“நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் எந்தவொரு வீடு அல்லது நிறுவனத்திற்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *