காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 08 வது மாதாந்த சபைக் கூட்டம் இன்று(16) சபா மண்டபத்தில் சபை தவிசாளர் பாஸ்கரன் தலைமையில் சகல உறுப்பினர்களினதும் பிரசன்னத்துடன் தமிழ் மொழியிலான தேசிய கீதத்துடன் ஆரம்பமானது.
07வது அமர்விற்கான கூட்டறிக்கை நிறைவேற்றப்பட்டு தவிசாளரின் அறிவிப்புக்கள் சபைக்கு முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரேரணைகளை ஆராய்ந்து நிறைவேற்றும் முகமாக தவிசாளர் முன்வைத்த பிரேரணைகளான காரைதீவு பொது நூலகத்திற்கு புதிய புத்தகங்களை அடிக்கி வைப்பதற்காக புத்தக இறாக்கை கொள்வனவு செய்வதற்கு அனுமதி, சபைக்குட்பட்ட சிறு கைத்தொழில் நிலையங்களுக்கு தெருக்கோட்டு சான்றிதழ் பெறாது ஈபிஎல் கட்டணம் மற்றும் கள பரிசோதனை கட்டணம் பெறப்பட்டு உரிமம் வழங்குவதற்கு சபை அனுமதி, சபைக்குட்பட்ட வீதிகளின் வடிகான்களில் மூடி இடப்படாத இடங்களுக்கு வடிகான் மூடிகள் இடுவதற்கு சபை அனுமதி பெறல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டு உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன.
அதே போன்று காரைதீவு பொது நூலகத்தை அடையாளப்படுத்தும் பெயர்ப்பலகை அமைக்க சபை அனுமதி பெற பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன் உபதவிசாளர் இஸ்மாயில் பிரேரணையாக மாளிகைக்காடு கிராமத்தின் மையவாடி கடலரிப்பு அனர்த்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதனால் புதிய மைவாடி ஒன்றினை அமைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய புதிய மையவாடிக்கான இடமொன்றினை அடையாளப்படுத்தி அதனை பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு சபை அனுமதி பெற கோரிக்கை முன்வைக்கப்பட்டு பிரேரணை உரையை நிகழ்த்தினார்.
மேலும், உறுப்பினர் றனீஸ் பிரேரணையாக காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வீதி விளக்குகளை ஒன்/ஓப் செய்வதற்கான கடமையில் ஈடுபடும் ஊழியருக்கான மாதாந்த கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதற்காக சபை அனுமதி பெற கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன் மாவடிப்பள்ளி கிராமத்திலுள்ள வீதிகளில் நீர் வழங்கலுக்கான குழாய்கள் பொருத்தப்படாத வீதிகளுக்கு குழாய் பொருத்துவதற்கான வேலைத்திட்டத்தினை பிஎஸ்டிஎஸ் நிகழ்ச்சித்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் உள்வாங்குவதற்கு சபை அனுமதி பெறல், 2025ம் ஆண்டுக்காக சபைக்கு கிடைக்கப்பெற்ற ஏஎம்பி வேலைத்திட்டத்தின் கீழ் குறிப்பிடப்படும் வேலைத்திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டு அதற்கான கொடுப்பனவு கோரப்பட்டும் இதுவரையில் கிடைக்கப்பெறாத காரணத்தினால் அவ் வேலைகளுக்கான கொடுப்பனவு தொகையினை தற்பொழுது சபை நிதியில் வழங்கி அதற்கான கொடுப்பனவு கிடைக்கப்பெற்றதும் வழங்கிய சபை நிதியை ஈடு செய்வதற்கு சபை அனுமதி பெறல் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.
மேலும், 2026ம் ஆண்டுக்கான பிஎஸ்டிஜி மற்றும் சிபிஜி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு சபை அனுமதி பெறல், பொது நிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் “உள்ளுராட்சி நிறுவனங்களின் வருவாய் உருவாக்கும் திட்டங்களுக்கு செயற்திறன் அடிப்படையிலான மூலதன மானியங்களை வழங்குதல்” அடிப்படையில் சபைக்கு 25 மில்லியன் தொகை கிடைக்கப்பெறவுள்ளதால், அவ் நிதியில் சபைக்கு சொந்தமான பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள பழைய பொது நூலக காணியில் கடைத்தொகுதியினை அமைக்கும் வேலைத்திட்டத்திற்கான திட்டமுன்மொழிவுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அக் காணியிலுள்ள கட்டிடத்தினை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சபை அனுமதி பெறல் போன்ற பல பிரேரணைகள் மற்றும் விடயங்கள் ஆராயப்பட்டு பொருத்தமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

