காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை தொடர்ந்து எதிர்வரும் 03ஆம் திகதி வரை தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று(17) உத்தரவிட்டார்.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்தவரும் மட்டு நீதிமன்ற கட்டிட தொகுதியில் சட்டத்தரணியாகவும் செயல்பட்டு வரும் சட்டத்தரணி ஒருவர் தனது பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில் கடமையாற்றி வந்த அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை பலாத்காரமாக கற்பழித்து 3 மாத கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டில் சட்டத்தரணியை கடந்த மாதம் ஜனவரி (30) திகதி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்காளி சார்பில் சட்டத்தரணி றிஸ்வி, சட்டத்தரணி யோகேஸ்வரன், சட்டத்தரணி கமலதாசன், சட்டத்தரணி சப்ராஸ், சட்டத்தரணி ரம்சீயா, சட்டத்தரணி சசிதரன் ஆகியோர் ஆஜராகியிருந்ததுடன் குற்றவாளியான குறித்த சட்டத்தரணியை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

