கடந்த பல வருடங்களாக செப்பனிடப்படாமல் இருந்த அட்டாளைச்சேனை ஆர்.டி.எஸ் வீதி, ஆலையடிவேம்பு (நாவற்குடா நிகோட் பின் வீதி) ஆகிய இரு வீதிகளுக்குமான கார்பட் மற்றும் கொங்கிரீட் இடுகின்ற பணிகள் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவால் நேற்று(26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1 கிலோமீற்றர் கொண்ட அட்டாளைச்சேனை ஆர்.டி.எஸ் வீதியானது 2 கோடி 20 இலட்சம் ரூபா செலவிலும் 530 மீற்றர் கொண்ட ஆலையடிவேம்பு நாவற்குடா நிகோட் பின் வீதியானது 1 கோடி 8 இலட்சம் ரூபா செலவிலும் செப்பனிடப்பட்டு, புனரமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வுகளில் அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் அப்கர் திரவியராஜ், அட்டாளைச்சேனை பிரதேச சபைத்தவிசாளர் உவைஸ், கல்முனை, அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர்களான அஸ்மிர் மற்றும் பாரி, பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் இணைப்பாளர் தோழர் சத்தார், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் ஆரிப் உட்பட இரு பிரதேச செயலகங்களின் பிரஜாசக்தி தவிசாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

