மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டத்தில் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றிலிருந்து கடந்த காலத்தைப் போல் எரிபொருள் தட்டுப்பாடு விலையேற்றம் ஏற்படுமென பொதுமக்கள் சகல எரிபொருள் நிலையங்களிலும் வரிசைகளில் நின்று காத்திருப்பதை காண முடிகிறது.
பொலிஸார் இதற்கான பாதுகாப்பை வழங்கி வருவதுடன் பொது மக்களுக்கு வேண்டிய எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.
இருந்தாலும் கடந்த காலங்களில் ஏற்பட்டதை போல் எரிபொருள் தட்டுப்பாடு வந்துவிடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தற்போது சகல எரிபொருள் நிலையங்களில் நீண்ட நேர வரிசையில் நிற்பதை காண முடிகின்றது.
விடுமுறை நாட்களில் பாவனை குறைவாக இருப்பதனால் அதிக எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை. இருப்பினும் பொதுமக்கள் அதிகமாக கொள்வனவில் ஈடுபட்டுள்ளதால் விடுமுறை நாட்களிலும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அவசரப்பட்டுப் போய் வீணான சிரமங்களுக்கு முகம் கொடுத்து செயற்கையான தட்டுப்பாடை ஏற்படுத்த வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

