பிறைந்துரைச்சேனையில் டெங்கு தொடர்பில் வீடு வீடாக களப்பரிசோதனைகள்

கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை 206ஏ மற்றும் 206சி கிராம சேவகர் பிரிவுகளில் இன்று(05) டெங்கு தொடர்பில் வீடு வீடாக களப்பரிசோதனைகள் மேற்கொள்ளத்தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் நேற்று முன்தினம்(03) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் முபாறக் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி, பொதுச்சுகாதாரப் பரிசோதகர், கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது இன்று காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை குறித்த இரண்டு கிராம சேவகர் பிரிவுகளிலும் வீடுகளில் டெங்கொழிப்பு தொடர்பான களப்பரிசோதனைகள் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் விஷேட டெங்கொழிப்பு உத்தியோகத்தர்களும் இந்நடவடிக்கையில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *