பல்துறை ஆளுமை ஜெனிதாவுக்கு வீரவனிதையர் விருது

தலைநகரை தளமாகக் கொண்டு இயங்கி வரும் புதிய அலை கலை வட்டத்தினால் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்களுக்கு இன்று(07) வீர வனிதையர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதன்போது கிழக்கு மண்ணின் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி மத்தியமுகாமை பிறப்பிடமாகவும் கல்முனையில் நற்பிட்டிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெனிதா மோகனும் வீரவனிதையர் விருதினை பிரதம அதிதியாக கலந்துகொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கரங்களால் பெற்றுக்கொண்டார்.

2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தராக நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமை புரிந்தவர் அதனைத்தொடர்ந்து காரைதீவு பிரதேச செயலகத்தில் தனது கடமைகளை செவ்வனே புரிந்து இடமாற்றம் பெற்று தற்போது கல்முனை பிரதேச செயலகத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறார். இவரது அப்பா ஒரு விவசாயி, இவர் குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதால் பல பொறுப்புக்களையும் தன் தலையில் சுமந்து சிறப்பாக குடும்பத்தை வழிநடாத்தி வருகிறார்.

தனது இலக்கிய பயணத்தில் பல ஆக்கங்களையும் படைத்தவர் தற்போது கல்முனைநெற் ஊடக அமைப்பில் மங்கையர் பகுதிக்குரிய ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். சமூகவியல் எனும் தலைப்பில் 13 கட்டுரைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியீடு செய்திருக்கிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதற்கான தண்டனைகளும் அடங்கிய கையேடுகள் இரண்டினை வெளியிட்டுள்ளார். இறுதியாக பெண்ணே விழித்திடு எனும் கட்டுரை தொகுப்பையும் வெளியிட்டார். இதைவிட பல பட்டிமன்றங்கள், கவிரயங்குகளில் கலந்து கொண்டார்.

சமூகவியல் எனும் புத்தகத்திற்கு ஜனாதிபதி கையொப்பமிட்பட்ட சான்றிதழ் கிடைக்கப்பெற்றது. சிறுவர்கள் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், மது ஒழிப்பு, பெண்கள் உரிமைகள், தலைமைத்துவம், மனித உரிமைகள், நல்லிணக்கம், பால்நிலை சமத்துவம் போன்ற தலைப்புக்களிலும் மனோகரி வளவாளராகவும் பல்துறைகளில் பங்காற்றி வருகிறார்.

கல்முனை பிராந்திய மனித உரிமைக் குழு அங்கத்தவராகவும், வேள்வி அமைப்பின் செயலாளராகவும், அம்பாறை வலுவிழப்புடன் கூடிய நபர்ளுக்கான வலையமைப்பின் பொருளாளராகவும், அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் செயலாளராகவும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயலணியின் சமூக நல்லிணக்க குழுவின் செயலாளராகவும், சமாதானமும் சமூகப்பணியும் நிறுவனத்தின் நல்லிணக்க குழுவின் உறுப்பினராகவும், சுவாட் அமைப்பின் ஆளுநர் சபை உறுப்பினராகவும் செயற்படுவதுடன் பல்வேறு சமூகப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஜெனிதா பன்முக ஆளுமையுடையவர் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

இவருக்கு 2023 ஆம் ஆண்டு பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் இலக்கியத்துறைக்கான இளங்கலைஞர் விருது கிடைத்ததோடு சமூக சேவைக்கான வனிதாபிமானி விருதினை இரு தடவைகள் மாகாண மட்டத்தில் முதல் தரத்தில் பெற்றுள்ளார். அதேபோல் சமாதான செயற்பாட்டாளருக்குரிய விருதினையும் 2024 ஆம் ஆண்டு மாகாண மட்டத்தில் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *