நிந்தவூர் அல்- அஸ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவைப் பிரிவு கொழும்பு சமூகங்கள் நிறுவனத்தின் அனுசரணையில், தேசிய ரீதியாக நடாத்திய அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியானது கொழும்பு அல் ஹிதாயா கல்லூரியில் 07ம் திகதி நடைபெற்றது.
இப் போட்டி நிகழ்ச்சி முஹம்மட் அஜ்மல் ஹானீப் தலைமையில் முஹம்மட் நவாஸ் அமாஸிர், அப்துல்லா முஹம்மட் நௌஷாத்,
ஆஸில் அஹமட் ஷௌக்கி ஆகிய மாணவர்கள் கலந்து கொண்டு, வெற்றி பெற்று பாடசாலைக்குப் பெருமை ஈட்டிக் கொடுத்துள்ளனர்.
மேற்படி தேசிய நிலைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் பணப்பரிசு, பரிசுப்பொதி, பதக்கம் மற்றும் சான்றிதழ் என்பவற்றினை கொழும்பு சமூகங்கள் நிறுவனத்தினர் வழங்கிக் கௌரவித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துவதோடு, இதற்கான வழிகாட்டல் ஆலோசனையை வழங்கிய கல்லூரியின் அதிபர் அப்துல் கபூர், இம் மாணவர்களை வெற்றிக்காக வழிப்படுத்திய ஆசிரியர் யூசூப் அஷ்றப் மற்றும் மாணவர்களின் பெற்றோருக்கும் நிந்தவூர் அல்-அஷ்றக் சமூகம் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

