ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முத்தேர் பவனி நடைபெற்றது.
நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு முத்தேர்த் திருவிழா மேளதாள இசை முழங்க, பக்த அடியார்களின் அரோகரா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
குறித்த தேர் பவனி ஆலயத்தில் நடைபெற்ற திரவிய அபிசேகம், வசந்த மண்டப பூஜை மற்றும் உள் வீதி உலா வருதல் ஆகியன இடம்பெற்று தேர்த் திருவிழா ஆரம்பமானது. இந்த தேர் பவனி ஹட்டன் மல்லியைப்பூ சந்தி வரை சென்று மீண்டும் திரும்பி ஹட்டன் புறநகர் வழியாக எம்.ஆர்.டவுன் வரை சென்று பிரதான வீதியூடாக இன்று ஆலயத்தினை வந்தடைந்தது.
கடந்த 02 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான சித்திரா பௌர்ணமி தேர்த் திருவிழா, நேற்று முன்தினம்(09) கங்கை நீர் எடுத்தல் மற்றும் வேட்டைத் திருவிழா ஆகியன இடம்பெற்று நேற்று(10) தேர் பவனி ஆரம்பமானது, அத்துடன் நாளை(12) பால்குட பவனியும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்த் திருவிழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருவதுடன் கலை கலாசார நிகழ்வுகள், நடன நாட்டிய நிகழ்வுகள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்று வருகின்றன.

