மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளையோரின் மனநல நலனை மேம்படுத்தும் பயிற்சியானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மனநல வைத்தியர் டான் சௌந்தரராஜாவின் ஒருங்கிணைப்பில் பிராந்தியி சுகாதார சேவைகள் கேட்போர் கூட மண்டபத்தில் நேற்று (27) இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த பிராந்திய சுகாதார பணிப்பாளர் மாவட்டத்தில் இளையோரின் மனநல நலனை மேம்படுத்த ஒத்துழைப்புடன் செயற்பட்டு வலுப்படுத்த வேண்டும் என்பதுடன் ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சினைகளை அடையாளம் கண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவபிரியா வில்வரத்தினம் அடித்தள மட்டத்தில் உளவியல் சமூக சேவைகளை ஒருங்கிணைப்பதன் அவசியத்தையும், நிலையான மற்றும் பண்பாட்டு ரீதியாக பொருத்தமான தலையீடுகளை உறுதி செய்ய அரச துறைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டினார்.
வாழைச்சேனை மருத்துவ சுகாதார அலுவலர் வைத்தியர் பாமினியினால் சிறுவர்களில் அதிக உடல் எடை தடுப்பு மற்றும் சிறுவர்களுக்கான அறிவாற்றல் நடத்தை சிகிச்சை தொடர்பான விளக்கங்களை வழங்கியதுடன் உடல் மற்றும் மனநலத்திற்கிடையிலான தொடர்பு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பாடசாலை மற்றும் சமூக சூழலில் சிபிரி பயன்பாடு குறித்து விளக்கங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்
இந் நிகழ்வில் ஆசிரியர் ஆலோசகர்கள், சுகாதார சேவைகள் இளைஞர் மையபணியாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உளவியல் சமூகப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

