செங்கலடி பிரதேசத்தில் 11 வயது சிறுமிக்கு இரும்பு கரண்டியால் சூடு வைத்து சித்ரவதை செய்த சிறுமியின் தாயாரை நேற்று முன்தினம்(05) இரவு கைது செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள செங்கலடி கணேசபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவ தினத்தன்று இரவு பொலிஸ் அவசர சேவை இலக்கத்துக்கு கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு 11 வயது சிறுமி மீது தாயார் இரும்புக் கரண்டியை நெருப்பில் சூடாக்கி அதனை குழந்தையின் கையில் வைத்து சித்திரவதை செய்துள்ளதையடுத்து சிறுமியின் தாயாரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட தாயாரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

