அத்தனகலு ஓயாவை சுற்றியுள்ள பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைந்துள்ளது

களு கங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (16) பதிவான மழைவீழ்ச்சி குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

களு கங்கை படுகையில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

நேற்றைய தினத்தில் நதிப் படுகை பிராந்தியங்களில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.

 

அத்தனகலு ஓயா மற்றும் களனி கங்கை பிராந்தியங்களின் சில இடங்களில் 60 முதல் 70 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இருப்பினும், ஏனைய நதிப் பிராந்தியங்களில் 25 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.

 

இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர் மட்டத்தில் காணப்பட்ட போதிலும், அது தற்போது அவதான நிலைக்குக் கீழ் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

 

குடா கங்கையின் நீர்மட்டம் இன்னும் சிறிய அளவிலான வெள்ள நிலைமையிலேயே காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *