மட்டக்களப்பில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, “எதிர்கால காலநிலை பாதுகாப்பிற்கு இயற்கையே எமது உந்துசக்தி” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வும் கண்டல் தாவர மீள்நடுகைத் திட்ட ஆரம்ப நிகழ்வும் இன்று (05) நடைபெற்றது.
அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கே. கஜன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் பங்கேற்புடன் தேவநாயகம் மண்டபத்தில் இந்நிகழ்வு ஆரம்பமானது.
இதன்போது, வாழ்வாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கண்டல் தாவரங்களை விருத்தி செய்யும் செயற்திட்டம், சைல்ட் பன்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உலக சுற்றாடல் தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகளுடன் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் மனித செயற்பாடுகளால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் தேவநாயகம் மண்டபத்திலிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாடகமும் அரங்கேற்றப்பட்டது.
உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள் நிலம், நீர் மற்றும் உயிரியல் அமைப்புகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, மீள்சுழற்சி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன் நிலைத்திருக்கும் வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியமும் இந்நிகழ்வின் மூலம் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சைல்ட் பன்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நாட்டுப் பணிப்பாளர் அதிதிகோஸ், நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் கலாநிதி தவசீலன், பேராசிரியர் மதிவேந்தன், முப்படைகளின் உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர்கள், இளைஞர் மற்றும் யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதனை விழிப்புணர்வுப் பேரணி மட்டக்களப்பு தேவநாயகம் கலையரங்கிலிருந்து ஆரம்பமாகி, காந்திப்பூங்கா வளாகத்தை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா அமைப்பினர் பங்கேற்ற விழிப்புணர்வு வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது. அத்தோடு நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு மாமரம் மற்றும் கொய்யா மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

