காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, குறித்த கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கற்பிட்டியிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது 2.0 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடற்றொழிலாளர்களும், கடற்படையினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

