கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில், “பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு – 2026” அண்மையில் (18) தியாவட்டவான் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.

 

பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.எம். நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் கலந்து கொண்டார்.

 

அத்துடன், தியாவட்டவான் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய அதிபர் ஏ.யு.எம். நளீம் ஸலாமி, பாலைநகர் ஹிஸ்புல்லா வித்தியாலய அதிபர் ஜஃபர்கான், மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலய பிரதி அதிபர், பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திலீபா சிவரூபன், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள அறபா நகர் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலயம், மயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலயம் மற்றும் பாலைநகர் ஹிஸ்புல்லா வித்தியாலயம் ஆகிய ஆரம்பப் பிரிவு பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டன.

 

கயிறு இழுத்தல், பாம்பு அட்டை, கிளித்தட்டு, கடற்கரை விளையாட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

மாணவர்களின் திறமைகள், ஒற்றுமை உணர்வு, குழு மனப்பான்மை மற்றும் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களைப் பேணும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

பாரம்பரிய விளையாட்டுகள் ஊடாக மாணவர்களிடையே உடல் ஆரோக்கியம், ஒழுக்கம், ஒத்துழைப்பு மற்றும் கலாசார மரபுகளைப் பாதுகாக்கும் எண்ணத்தை வளர்த்தல் என்ற பிரதான நோக்கில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்தியமைக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *