சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் கொள்ளை; 6 உண்டியல்கள் உடைப்பு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு(01) உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் நேற்றிரவு ஆலயத்தின் பின் கதவு வழியாக உள்நுழைந்த திருடர்கள் 6 உண்டியலை உடைத்து அதிலிருந்த இருந்த பணத்தைத் திருடியுள்ளனர்.
இதில் திருடப்பட்ட மூன்று உண்டியல்களை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தின் பின்புறத்தில் நீரோட்டம் கொண்ட கங்கையில் வீசிச் சென்றுள்ளனர்.
அத்துடன் ஆலயத்தில் உள்நுளைந்த திருடர்கள் தங்களது உருவங்கள் பதிவாகாமல் இருக்க ஆலயத்தில் பிரதான காரியாலயத்தில் முழு ஆலய வளாகத்தைக் கண்காணிக்கும் சி.சி.டி.வி. கேமராவின் முழு இணைப்பையும் துண்டித்து சி.சி.டி.வி. காணொளிகளை
சேமிப்பு செய்யும் பதிவு கருவிகளையும், பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும் திருடிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த நுவரெலியா தடயவியல் பொலிஸார் கைரேகைகளைப் பதிவு செய்து, ஆலயத்தில் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
சந்தேக நபர்கள் ஆலயத்தில் உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பெருந்தொகை பணத்தை திருடிச் சென்றுள்ளதாகவும் அவை இன்னும் கணக்கொடுக்கப்படவில்லை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *