யாழில் இளைஞர் பரிமாற்ற நல்லிணக்க வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மாவட்ட இளைஞர் சம்மேளனமும் இணைந்து நாடாத்திய இளைஞர் பரிமாற்ற நல்லிணக்க வேலைத்திட்டத்தின் ஆரம்ப மற்றும் அறிமுக நிகழ்வும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி வினோதினி சிறிமேனன் தலைமையில் நேற்று(07) மு. ப 11.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 

இந் நிகழ்விற்கு முன்னராக குருநாகல், கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த 160 இளைஞர் யுவதிகள் பழைய பூங்காவிலிருந்து மாவட்டச் செயலகத்திற்கு சம்பிரதாய முறைப்படி அழைத்து வரப்பட்டனர்.

 

இந் நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன்,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாணப் பணிப்பாளர் திரு. கே.டி.சி.ஹாமினி, யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி யு.சிவகாமி, யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளருமான திரு. எஸ்.கபிலன் மற்றும் வட்டுக்கோட்டை லயன்ஸ் கழகத் தலைவர் திரு. ரி. திருச்செந்தூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும், ஐந்து மாவட்டங்களிலிருந்தும் வருகைதந்த இளைஞர் யுவதிகள் நேற்று தொடக்கம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் யுவதிகளின் வீடுகளில் தங்கியிருப்பார்கள். அந்தவகையில், குருநாகலிருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகள் ஊர்காவற்றுறைக்கும், கொழும்பிலிருந்து வருகை தந்தவர்கள் நெடுந்தீவுக்கும், ஹம்பாந்தோட்டையிலிருந்து வருகை தந்தவர்கள் வேலணைக்கும், கேகாலைக்கும் வருகை தந்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கும், மொனராகலையிலிருந்து வருகை தந்தவர்கள் காரைநகரிற்கும் சென்று அவர்களுடன் இணைந்து பழகுவதனூடாக நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்துவதே இந் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்காகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *