வாகரை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையிலும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத்தின் பங்கேற்புடன் பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(16) நடைபெற்றது.

 

இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன.

 

மேலும் கல்வி, நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் காணி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, குடிநீர், வனப்பாதுகாப்பு, யானை – மனித மோதல், சிறு நீர்ப்பாசனக் குளங்கள் அபிவிருத்தி மற்றும் பிரஜா சக்தி போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

 

மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.

 

இதன் போது காரமுனை பகுதியில் இடம்பெறும் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத்தால் முக்கிய விடயமாக வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

இக் கூட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *