களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் தேசிய போதைப் பொருள் தடுப்பு நிகழ்வு

மண்முனை தென் எருவில்பற்று  பிரதேச செயலகத்தில் “முழு நாடும் ஒன்றாக” போதைப்பொருள் தடுப்பு வார தேசிய செயல் திட்டம் நிகழ்வானது பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் சத்யகெளரி தரணிதரன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நேற்று(05) இடம்பெற்றது.

தேசிய செயற்பாட்டு சபையினால் நாடளாவிய ரீதியில் விஷ போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்தல் மற்றும் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கும் புனர்வாழ்விற்கான ஆற்றுப்படுத்தல் விழிப்புணர்வு போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களான களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை, பஸ் தரிப்புநிலையம், முச்சக்கரவண்டி தரிப்பிடம் மற்றும் இளைஞர், யுவதிகளுக்கு சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர் மற்றும் சமுதாயம் சார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதேச செயலக சமுதாயம் சார் உத்தியோகத்தர் இந் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டின் இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான  தகவல்களை 1818 எனும் இலக்கத்தினூடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளான நபர்களுக்கான உளவளத்துணை சிகிச்சை, புனர்வாழ்வு தொடர்பாக 1927 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *