ஓசை ரமணா தயாரிப்பில் உருவான ‘அந்தோனி’ திரைப்பட ஊடக – ஊரக சந்திப்பு

உலக சினிமா நோக்கிய முனைப்பாக இலங்கைத்தீவின் தமிழர் தாயக கடல்வாழ் மக்களின் வாழ்வியலை கருப்பொருளாக கொண்டு உருவாகியுள்ள ‘அந்தோனி’ திரைப்படத்தின், பிரான்ஸ் திரையிடலுக்கான ஊடக மற்றும் ஊரக சந்திப்பு இடம்பெற்றது.

 

தலைநகர் பரிசின் தமிழர் வர்த்தக மைய பகுதியில் அமைந்துள்ள, சோதியாக கலைக்கல்லூரியில் நேற்று(07) மாலை இச்சந்திப்பு இடம்பெற்றது.

 

‘அந்தோனி’ திரைப்படத்தின் பிரான்ஸ் விநியோகஸ்தர் பாரத் மதி, ‘அந்தோனி’ திரைப்படத்தில் நடித்த மூத்த கலைஞர்களான தயாநதி மற்றும் இரா. குணபாளன் ஆகியோர் உரையாடலை நிகழ்த்தியிருந்தனர்.

 

இதுவரை நிலத்திலும் புலத்திலும் வெளிவந்த திரைப்படங்களில் சில சில குறைபாடுகள் இருந்திருந்தாலும், ‘அந்தோனி’ திரைப்படம் அத்தனை விடயங்களை உள்ளடக்கிய ஓர் முழுநீளத் திரைப்படமென கருத்தினை தெரிவித்த பாரத் மதி, நாங்கள் ஜெயிச்சிட்டோம் என உற்சாகத்தினை தருகின்றது என குறிப்பிட்டிருந்தார்.

 

குருநகர், பாசையூர், நவாந்துறை, அல்லபிட்டி என தனது தாயக வாழ்வியலை ‘அந்தோனி’ திரைப்படத்தை நினைவுபடுத்தி கருத்துரைத்த மூத்த கலைஞர் தயாநிதி, கடலோடிகளின் வாழ்வியலை இத்திரைப்படம் நகர்த்தியிருக்கின்றது என குறிப்பிட்டிருந்தார்.

 

நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதிக பொருட்செலவில் உருவாக்கம் பெற்றுள்ள இத்திரைப்படமானது, இனிவரும் காலங்களில் நல்ல திரைப்படங்களை தருவதற்கு காத்திருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையினை ‘அந்தோனி’ தருக்கின்றது என மூத்த கலைஞர் இரா.குணபாலன் கருத்துரைத்திருந்தார்.

 

பிரான்சில் உள்ள பல்வேறு ஊர் சங்கங்களின் பிரதிநிதிகள் இசந்திப்பில் கலந்து கொண்டிருந்த நிலையில், இத்திரைப்படத்தின் முன்னோட்டம் நம்பிக்கை தந்துள்ளதோடு தமது கடல்வாழ்வியலை நினைவுபடுத்துவதாக குறிப்பிட்டிருந்தனர்.

 

எதிர்வரும் மார்ச் 14ம் நாள் சனிக்கிழமை ‘அந்தோனி’ திரைப்படத்தின் முதல்சிறப்புக் காட்சி திரையிடலுக்கு, குடும்பமாக ஊராக அரங்கு நிறைந்த திரையிடலாக அமைய அனைவரும் ஒத்துழைப்போம் என சந்திப்பில் கலந்து கொண்ட அனைவரும் உறுதியளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *