உணவுக்காக கொண்டு சென்ற மீன் பாணுக்குள் 2 கஞ்சா பொதிகள்  கைப்பற்றல்

கடவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் காலை உணவுக்காக பாடசாலைக்கு கொண்டு சென்ற மீன் பாணுக்குள் இருந்து 2 கஞ்சா பொதிகள்  கைப்பற்றப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று(09) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, கடவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் காலை உணவுக்காக பாடசாலைக்கு மீன் பாண் ஒன்றை கொண்டு சென்றுள்ளார்.

பாடசாலை மாணவன் மீன் பானை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாணுக்குள் இருந்த 2 பொதிகளை கண்டுள்ளார். பின்னர் இந்த பாடசாலை மாணவன் மீன் பாணுக்குள் இருந்து 2 பொதிகளை ஆசிரியரிடம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஆசிரியை, பாடசாலை மாணவனின் தாயாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய போது, மாணவனின் தாயார் பாண் விற்பனை செய்யும் முச்சக்கரவண்டியிலிருந்து  மீன் பாணை வாங்கியதாகவும், மாணவன் பாடசாலைக்கு சென்ற பின்னர் குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி வந்து மீன் பாணை மாணவனுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டாம் என்று கூறியதாகவும் ஆசிரியையிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஆசிரியை இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் அறிவித்துள்ளார். பின்னர் பாடசாலை அதிபர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையில், குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி பாண் விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி வேறொரு நபருக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கஞ்சா பொதிகள் அடங்கிய மீன் பாணை தவறுதலாக பாடசாலை மாணவனுக்கு கொடுத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கடவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *