டித்வா புயலால் அழிவடைந்த தோட்டப்புற மக்களின் வீடுகளை மீளமைப்பது புறக்கணிப்பு

நாட்டில் 675-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த டித்வா புயலால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அவசியமான ஏற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

டித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு மேலதிகமாக, பொதுமக்களின் தேவைகளுக்காக மேலதிகமாக 500 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செவ்வாய்க்கிழமை (7) அன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இருப்பினும், அதே நாளில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் தோட்டத் தொழிலாளர்களின் தனித்துவமான சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளவில்லை.

“டித்வா புயல் அனர்த்தத்தால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆலோசனைகளுக்கமைய, வீடுகள்
சேதமடைந்த குடும்பங்களுக்கான வீடமைத்தல் மற்றும் புனரமைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் வகுக்கப்பட்டிருப்பினும், அச்சுற்றறிக்கை ஆலோசனைகளுக்கமைய தோட்டத்தொழிலாளர் வதிவிடதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு விசேட ஏற்பாடுகள் இச்சுற்றறிக்கையில் குறிப்பிடப்படவில்லை,” என அமைச்சரவை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தோட்டக் கம்பனிகளால் நிர்வகிக்கப்படுகின்ற தோட்டங்களில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் வீடுகள் டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வேறு இயற்கை அனர்த்தங்களால் முழுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகியமை/மண்சரிவு அதி ஆபத்துக்குள்ளாகியமை/பகுதியளவில் பாதிப்படைந்து அவற்றின்
பயன்பாட்டுக்காலம் முடிவடைந்தமை உறுதிப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு அமைச்சால்
வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் மற்றும் வீட்டுத் திட்ட வரைபடத்திற்கமைய 650 சதுர அடி வீடொன்றை
அமைப்பதற்காக கட்டம் கட்டமாக 05 மில்லியன் ரூபாய்களை அரசு வழங்கி, அவ்வாறான தொழிலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

“குறித்த தொழிலாளிக்கு அவர்கள் வசித்து வருகின்ற தோட்டத்திலேயே பாதுகாப்பான இடத்தில் 10 பேர்ச்சர்ஸ்
காணித்துண்டை அந்தந்த தோட்டக் கம்பனிகளால் வழங்குவதற்கும், தோட்டத் தொழிலாளரின் சேவை
தொடர்ந்தும் தேவையில்லையென தோட்டக் கம்பனி தீர்மானிக்கின்ற போது, தொழிலாளரிடமுள்ள
காணியில் அல்லது வழங்கப்படுகின்ற 05 மில்லியன் ரூபாய்களில் காணியொன்றைக் கொள்வனவு
செய்து வீட்டை அமைப்பதற்கும் உத்தேச வேலைத்திட்டத்தின் மூலம் வசதியளிக்கப்படும்.”

இதற்கமைய 2026 ஏப்ரல் 06 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குறிப்பிட்ட திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அமைச்சரவை அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.

2026 ஏப்ரல் 7 அன்று காலை 10 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அண்மைய அறிக்கையின்படி, டித்வா புயலால் நாட்டில் 24 மாவட்டங்களில் 5,866 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதோடு, 25 மாவட்டங்களில் 109,629 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்லவென, கடந்த மார்ச் 28, 2026 அன்று பிரதமர் ஹரினி அமரசூரியவுடன் இடம்பெற்ற சந்திப்பில் மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு வலுவாக வலியுறுத்தியிருந்தது.

பேரழிவால் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறை சாத்தியமான 15 முன்மொழிவுகளுடனான ஒரு அறிக்கையை மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *